Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • கோயில்கள்>
  • சபரிமலை ஐயப்பன் ஆலயம்
  • சபரிமலை ஐயப்பன் ஆலயம்

    சபரிமலை ஐயப்பன் ஆலயம்

    வணக்கவுரை

    (1) சபரிமலையிலுள்ள ஐயப்பன் பற்றிய வரலாறு பதினெண்சித்தர் பீடாதிபதிகள் எழுதிவரும் குருபாரம்பரியம் (Religious History), அரசபாரம்பரியம் (Political History), இலக்கிய பாரம்பரியம் (History of The Tamil Language and Literature) என்ற மூன்றின் செய்திகளின் அடிப்படையில் பலநூறு பக்கங்களுக்கு ஏற்கனவே (முப்பதாண்டுகளுக்கு முன்பு இ.ம.இ.யின் பாரம்பரியத் தலைவராக, இரண்டாவதாகப் பொறுப்பேற்ற சித்தர் காகபுசுண்டர் (காக்கையர்), காக்காவழியன் பண்ணையாடி ம.பழனிச்சாமி பிள்ளை எழுதியுள்ளார்.) எழுதப்பட்டுள்ளது. அதாவது இன்றுள்ள ஐயப்பனின் உலோகச் சிலை (The Metal Idol) அருளேற்றப்பட்ட (1954-1956) காலத்தில் எழுதப்பட்டது. இன்று இந்துமதத் தந்தை, குவலய குருபீடம், குருதேவர், இந்து மத மறுமலர்ச்சிக்காகச் ‘சித்தர் இராமாயணம்’, ‘சித்தர் மகாபாரதம்’, ‘சித்தர் சிவபுராணம்’, ‘சித்தர் முருகபுராணம்’, ‘சித்தர் மேரு புராணம்’ … முதலியவைகளை வெளியிடும் பணியைத் துவக்கியுள்ளார்கள்.

    சித்தர் இராமாயணத்தில் இராமன் மனைவியைப் பிரிந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகச் சென்ற போது பல அருளூற்றுக்களை உண்டாக்கினான். நீலமலை, கோடைமலை, பெரியகுளம், சோத்துப் பாதை, அக மலை, சொர்க்கம், தேவிகுளம், … முதலியவை இராமனால் உருவாகிட்ட அருளூற்றுக்கள். இராமன் சபரியின் பணிவிடைகளை ஏற்று, அவள் வழங்கிய கனிகளை உண்டதால் விளைந்த பொறாமைத் தீயின் வடிவமாக எழுந்த யக்ஞத் தீயில் சபரி கருகி சாம்பலாக்கப்பட்டாள். இராமன் இம் மலைப்பகுதிக்கே அவளின் பெயரைச் சூட்டினான். பல காரணங்களால் இராவணப் போர் முடிந்து அயோத்திக்கு மலர் விமானத்தில் திரும்பும்பொழுது சபரிமலையில் தங்கினான். மீண்டும் அயோத்தியில் சீதையைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு தனிமைத் தீயில் வாடும்போது, இச் சபரிமலைக்கு வந்து சபரியின் தம்பி (பதினாறாவது குழந்தையாகப் பிறந்தவன்; சபரியின் தம்பி ஐயப்பன்) அருவுருவச் சித்தி பெற்று வெட்டவெளிக் கருவறையில் எழுந்தருளி “அருட்பெருஞ்சோதி ஆலயம்” உருவாகிய திருவிழாவில் மூன்றாவது முறையாகப் பங்கு பெற்றான்.

    இப்படி இராமாயணக் காலத்தில் திரேதகாயுகக் கடைசியில் உருவானதுதான் சபரிமலை ஐயப்பன் ஆலயம். (இராமனுக்குப் பிறகு சில ஆயிரம் ஆண்டுகள் + துவாபர யுகம் 8,64,000 + கலியுகம் 5,087 = 8,69,087 + யக்ஞவல்லியின் குறிப்பின்படி ‘திரேதகாயுக நாயகனான தனக்குப் பின் நூறு சத்தியாண்டுகள் கழித்து; உலகம் முடிந்து கருவூறாரின் (சந்திர குலம்) திங்கட் குலச் செல்வன் கண்ணன் தோன்றி இந்து மறுமலர்ச்சியும்; அருளாட்சி மீனாட்சியும் செய்வாள் என்பதற்கேற்ப 243 x 100 = 2,43,000 ஆண்டுகள் இராமனுக்குப் பிறகு திரேதகாயுகம் நீடித்திருக்க வேண்டும். எனவே, சபரி மலை ஐயப்பன் தோன்றி 8,69,087 + 2,43,000 = 11,12,987 பதினோரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தேழு ஆண்டுகளாகின்றன, இன்று 1986 சனவரித் திங்கள் வரை.) எனவே, இன்று 1986 சனவரித் திங்கள் வரை கணக்குப் போடும்போது சபரி மலை என்று ஓர் அருளூற்று, அருட்பெருஞ்சோதி ஆலயம் வெட்டவெளிக் கருவறை பதினெட்டாம்படிக் கருப்புகளின் அருட்கோட்டம் உருவாகி 11,12,987 ஆண்டுகளாகின்றன. இதன் வழிபாடுதான் இன்றைக்கு ‘இந்து மத விழிச்சிப் பேரணியாக’, ‘எழுச்சிப் பேரணியாக’, ‘செழுச்சிப் பேரணியாக’ அமைந்து விடுகின்றது! வாழ்க ஐயப்பன் வழிபாடு.

    (2) இம்மண்ணுலகின் பயிரினங்களும், உயிரினங்களும் பண்பட்டு உயர்வுற்று, உய்வடைவதற்காகவே அண்டபேரண்டம் ஆளும் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் தங்களின் தாய்மொழியான அமுதத் தமிழில் இந்துமதம் என்கிற ‘சித்தர் நெறி’யை வழங்கினார்கள். இது இந்துமதம் காலப்போக்கில் அடையக் கூடிய தளர்ச்சி பழுது தேக்கம் நலிவு மெலிவு … முதலியவைகளை அகற்றுவதற்காக மூலப் பதினெண்சித்தர்கள் மானுட இனத்தின் ஆயுட்காலமாகிய 48 இலட்சம் ஆண்டுகளுக்குள் நாற்பத்தெட்டு (48) பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றுகின்ற ‘அருளுலக மறுமலர்ச்சித் திட்டத்’தை வகுத்துச் சென்றார்கள்.

    (3) இதன்படி கடந்த 43,73,086 ஆண்டுகளில் வாழையடி வாழையாகத் தோன்றி வரும் பதினெண்சித்தர் பீடத்தின் “ஞானவேந்தராக” அருட்பேரரசராகத் தோன்றிச் செயல்படும் அருளாட்சி நாயகம், குவலய குருகுல பீடாதிபதிகள், குருதேவர், ஞானத் தந்தை, ஞானாச்சாரியார், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், இராசிவட்ட நிறைவுடையார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார், இந்துமதத் தந்தை அவர்கள் இந்துமத மறுமலர்ச்சிப் பணியில் தமது திருக்கூட்டத்தாருடன் ஈடுபட்டுள்ளார். எனவே, இவர் இந்துமதத்திலுள்ள அனைத்து வகையான இருள்களையும், இழிவுகளையும், பழிகளையும், அழிவுகளையும், இழப்புகளையும், இடுக்கண்களையும், கறைகளையும், குறைகளையும், ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தனமான கதைகளையும், கற்பனைகளையும், தேவையற்ற சடங்குகளையும், பயனற்ற பழக்கங்களையும், தன்னல வெறியர்களின் சூழ்ச்சிகளையும், சுரண்டல்களையும், காலப்போக்கில் உருவாகிவிட்ட மூடநம்பிக்கைகளையும், ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும், அவலங்களையும், கேவலங்களையும், … முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    (4) இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் தாம் ஈடுபட்டுள்ள பணி அணி பெறுவதற்காகவே; கி.பி. 1772இல் கருவூறார் வழிவந்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை தோற்றுவித்த இ.ம.இ., அ.வி.தி. முதலிய நிறுவனங்களையும் அவற்றின் கீழ் பல நிறுவனங்களையும் உருவாக்கி அருளாட்சிப் பணியைத் துவக்கியுள்ளார். இப்பணிக்கு ஊர்தோறும் பல கிளை நிலையங்களை அமைத்தும், ஆயிரமாயிரம் அடியான்களையும், அடியார்களையும் உருவாக்கிச் செயல்பட்டும், நாற்பத்தெட்டு வகை வழிபாட்டு நிலையங்களையும், சுடுகாடு, புதைகாடு, … முதலிய பதினெட்டு வகைக் காடுகளையும் புத்துயிர்ப்புச் செய்தும் … செயல்படுகிறார் குருதேவர் தலைவர், ஞானாச்சாரியார்.

    (5) இந்த நிறுவனங்களின் கட்டுக்கோப்புக்காகவும், நிர்வாக ஒருங்கமைப்புக்காகவும் தேவையான இலக்கியங்களை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார் இந்துமதத் தந்தை. பல அரிய அருளூறு மந்திரங்கள் (இது அனைத்து வகையான பூசைமொழிகளையும், சடங்கியல் மொழிகளையும், ஒலிகளையும் குறிக்கும் பொதுச் சொல்லாகவே இங்கு பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில், மந்திரம், மந்திறம், மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், தந்திரம், தந்திறம், தந்தரம், தாந்தரம், தாந்தரீகம், எந்திறம், எந்திரம், ஏந்தரம், ஏந்தரம், ஏந்தரீகம், … என்று நாற்பத்தெட்டு வகையான அருளூறு வாசகங்கள் அல்லது இலக்கியங்கள் தமிழ்மொழியில்தான் இருக்கின்றன.

    (6) இந்து மறுமலர்ச்சிக்காக இந்துமதத்தைத் தோற்றுவித்த பதினெண்சித்தர்களின் நேரடி உரிமை வாரிசாகிய குவலய குருபீடம், இந்துமதத் தந்தை, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் வெளியிட முன்வந்துள்ள வரலாறுகள், புராணங்கள், இதிகாசங்கள், பூசாவிதிகள், குருமார் ஒழுகலாறு, கருவறைப் படிகள், அத்திர, சாத்திர, சூத்திர, தோத்திர, நேத்திரங்கள், சுருதி, ஆரண, ஆகம, மீமாம்சைகள், நேம, நியம, நிடத, நிட்டைகள், … முதலியவை அச்சேறிடக் கோயில் உண்டியல்களில் காணிக்கையாகக் கொட்டுவது போல் நிதியுதவி தாருங்கள். இந்துமதத்திற்கு வடிவமைப்பும், புதுவாழ்வும் ஏற்பட்டிட இந்துக்கள் தாராளமாக ஏராளமான நிதியை வழங்கியேயாக வேண்டும். ஏனெனில், பதினெண்சித்தர்களும் நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும் படைத்துள்ள இலக்கியங்கள்தான் இந்துமத உயிர்மூச்சாக உடலின் அங்கங்களாக, இயக்கச் சத்தியாக இருக்கின்ற ஆயிரமாயிரம் கோயில்களைக் குடமுழுக்குச் செய்து பார்ப்பது போல் சித்தர்கள் இலக்கியங்கள் அச்சேறி மெய்யான இந்துமதம் வளவளர்ச்சியும், மலர்ச்சி செழிச்சியும் பெற்றிடச் செய்வதே உடனடித் தேவை.

    இந்துமதம் ஒரு சமூக விஞ்ஞானம்

    என்ற பேருண்மையும்,

    இந்துமதமே உலக முதல்மதம், மூலமதம், மதங்களின் தாய், மனிதப் பண்பாட்டுக்கும் நாகரீகத்துக்கும் கரு, …

    என்ற பேருண்மையும் சித்தர்களின் இலக்கியங்களால்தான் விளங்கிடும். எனவே, மானுட நல வளர்ச்சிக்காக சித்தர்களின் இலக்கியங்கள் அச்சேறிடப் பேருதவிகளை நல்குமாறு அனைவரையும் வேண்டி இந்த வணக்கவுரையை முடிக்கின்றோம்.

    (7) அருளை அநுபவப் பொருளாக வழங்கி மருந்தினால் தீராத நோய்களை யெல்லாம் தீர்த்து மானுட நலத்துக்காக இயங்கும் அருட்பணி விரிவாக்கத் திட்ட நிலையங்களை அனைவரும் நாடி நலமடையுமாறு வேண்டுகிறோம்.

    “சித்தர்களின் மெய்யான இந்துமதம் விஞ்ஞானச் சூழலிலும், பகுத்தறிவுப் போக்கிலும், தொண்டு நோக்கிலும், … செயல்படுகிற ஒன்றேயாகும்”

    என்ற தத்துவமே இன்றைய இந்துமதத் தந்தையின் சாதனைகளும், போதனைகளுமாகும் என்பதைக் கூறி இந்த உரையை முடிக்கின்றோம்.

    ஓம் திருச்சிற்றம்பலம்

    அன்பு
    தலைமைப் பொறுப்பாளர்,
    அருள்மிகு அங்காளபரமேசுவரி சன்னிதானம்.

    தொடர்புடையவை: